Main Menu

ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லாது என தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாகாநந்த கொடிதுவக்கினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன, ஜனக் டி சில்வா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டது.

பொதுத் தேர்தலில் போதிய வாக்குகளைப் பெறத் தவறிய ஒருவர், அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியாது என சுட்டிக்காட்டி சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு இந்த மனுவை தாக்கல் செய்தார்.

தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்க வேண்டியது சட்டரீதியான தேவை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் 2020 பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னரே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றும் அதன்பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதில் ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்றும் தெரிவித்திருந்தார்.

பகிரவும்...