Main Menu

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யாழ். மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டது. இது தொடர்பாக ஆளுநரும் சில பணிப்புரைகளையும் அறிவுறுத்தல்களையும் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் யாழில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற பிரதேச சபையினர், உள்ளூராட்சி அதிகார சபையின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அதனடிப்படையில் தங்களுடைய சந்தை தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடைமுறைகளை பின்பற்றி அவற்றை மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அதாவது ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பிற்பாடு இவற்றை அந்த இடங்களிலே திறந்து செயற்படுத்தக்கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் சுகாதார ஒழுங்கு விதிகளை வியாபாரிகளும் அங்கு செல்லும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்

சில விடயங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையினருக்கும் கூறியிருக்கின்றோம் அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சந்தைகள் யாவும் வழமை போன்று மக்களுக்கு சேவையாற்ற திறக்கப்படவுள்ளது. அத்தோடு பொதுமக்கள் சுகாதார நடைமுறையிணையும் சமூக இடைவெளியினையும் பின்பற்றி சந்தையினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் நான் கோரிக்கை விடுகின்றேன்” என தெரிவித்தார்.

பகிரவும்...