Main Menu

மிலேனியம் உடன்படிக்கை – ஜனாதிபதிக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்!

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுடனான மிலேனியம் உடன்பாட்டின் சில உட்பிரிவுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கவலைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க மறுத்திருந்தார்.

இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதுவர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள மிலேனியம் உடன்பாட்டில் உள்ள சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் தொடர்பாக, அவசர கடிதத்தில், அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த உடன்பாடு வெளிப்படையானது என்றும் இலங்கை மக்களுக்கு செழிப்பை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் அந்த கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ள ஜனாதிபதி, பத்தாண்டுகளாக இலங்கையின் வளர்ச்சியில் அமெரிக்காவின் முதலீடுகளின் பங்களிப்பு குறித்து நன்கு அறிந்திருப்பார் என்பதையும் அமெரிக்க தூதுவர் தனது கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த உடன்பாட்டின் மூலம் வழங்கப்படவுள்ள 480 மில்லியன் டொலர் அமெரிக்க மக்களிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கும் ஒரு பரிசு என்றும் அது கடன் அல்ல என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும் மிலேனியம் சவால் நிதியத்தின் கொடையினால் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்தும் அதில் எந்த தலையீடுகளும் இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான விளக்கத்தை அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...