மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீத வாக்களிப்பு: 94ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்களிப்பு குறித்து அவர் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “கல்குடா தேர்தல் தொகுதியில் 76வீதமும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 78வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 73 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கல்குடாவில் 89 ஆயிரத்து 210 பேரும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 864 பேரம் பட்டிருப்பில் 68 ஆயிரத்து 263 பேருமாக மொத்தம் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 328 பேர் வாக்களித்துள்ளனர்.
கல்குடாவில் 28 ஆயிரத்து 301 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியில் 40 ஆயிரத்து 603 வாக்குகளும், பட்டிருப்பில் 25 ஆயிரத்து 761 வாக்குகளுமாக மொத்தம் 94 ஆயிரத்து 665 வாக்குகள் அளிக்கப்படவில்லை.
இன்று நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பில் எதுவித அசம்பாவிதங்களோ அல்லது வன்முறைகளோ பதிவுசெய்யப்படவில்லை. எனினும் 105 சாதாரண முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன.
கடந்த 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 67வீதமானோர் வாக்களித்திருந்தனர். ஆனால், இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 76.15வீதமாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 பிரச்சினைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக வாக்களித்ததை காணக்கூடியதாக இருந்தது.
நடைபெற்ற தேர்தல்களுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. மட்டக்களப்பு தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியும் பட்டிருப்பு தொகுதி, கல்குடா தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரியும் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும், இத்தேர்தல் சுமூகமாக இடம்பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.