Main Menu

மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரனாவுக்கான அறிகுறிகள்?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதாக சந்தேகிக்கபட்டுள்ளது.

கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு அவர் வந்தநிலையில் அங்கு காய்ச்சலுக்குட்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

கொழும்பில் உள்ள விடுதியில் இவர் சீனர்களுடன் இருந்துள்ளதாகவும் இதன்காரணமாக இவரின் நோய் குறித்து வைத்தியர்கள் சந்தேகம் கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரிவில் முதல் நபராகவும் இவர் பதிவாகியுள்ளார்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டியை மறித்து வைத்தியசாலையைச் சூழவுள்ள பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக ஆறு பேரைக் கைதுசெய்துள்ளனர்.

தற்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினைச் சூழ விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...