Main Menu

மக்கள் கருணா மீது முன்வைத்துள்ள குற்றச் சாட்டுக்களை அரசாங்கம் விசாரிக்க வேண்டும்- வியாழேந்திரன்

கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன், அவரது பிறந்த நாளான இத்தினத்தில் அவர் தலைமையில் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு வில்லியம் ஆல்ட் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். வியாழேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு என்பது நாட்டின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டவாறு அந்த வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தற்போது 34 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாம், மூன்றாம் கட்டம் வழங்கப்படவுள்ளது. கருணா  வெளியிட்டிருந்த ஒரு கருத்தை  சில ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன்.

மட்டக்களப்பில் இருக்கின்ற அமைச்சர் அந்த வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்துக்கு 20ஆயிரம் ரூபாய் வாங்கி வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஒரு 5 ரூபாய் பெறுமதியான விண்ணப்பபடிவத்தை பிரதேச செயலகங்களில் எடுத்து, அவர்கள் விண்ணப்பித்து அந்த வறுமைக்கோட்டில் உள்ளவர்கள் அந்த வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். எனவே இது ஒரு வகையான பொறாமையின் வெளிப்பாடு

கருணா என்பவரின் பெயரை நான் எங்கும் பாவித்ததில்லை. காரணம் என்னவென்றால் அவர் மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்களின் பெயரை உச்சரித்துதான் பிரபல்யமாகிக்கொள்ள வேண்டும் என நினைக்கின்ற ஒருவர்.  ஆகவே அவர் என்ன பேசினாலும் கணக்கெடுப்பதில்லை.

மேலும், அவரை  ஒரு அரசியல்வாதியாகவும்  ஒரு மனிதனாகவும் நான் கணகெடுப்பதில்லை.

இதேவேளை, எமது மாகாண மக்கள், இவர் தொடர்பாக சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தனர். எனவே இவர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் உடனடியாக விசாரிக்க வேண்டும்.

மேலும், 20ஆயிரம் ரூபாய் விண்ணப்பத்துக்கு நான் பணம் வாங்கியதாக கருணா நிரூபித்தால், எனது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குவேன். அதேவேளை கருணா அதனை நிரூபிக்காவிடால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...