Main Menu

மகாத்மா காந்தியின் 151ஆவது ஜனன தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

மகாத்மா காந்தியின் 151ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் நேற்று (02) அலரி மாளிகையில் அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடியாகவும், அகிம்சையின் தந்தையாகவும் விளங்கியவராவார். அவர் அகிம்சைவாத கொள்கையை இந்தியாவில் மாத்திரமின்றி உலகம் பூராகவும் பரப்புவதற்கு பணியாற்றினார்.

1927ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த மகாத்மா காந்தி, பல வாரங்கள் இலங்கையில் விஜயங்களை மேற்கொண்டிருந்ததுடன், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் பௌத்த சமயம் குறித்த உபதேசமொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

காலி மஹிந்த கல்லூரி உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு இடங்களில் உபதேசங்களை நிகழ்த்தியுள்ள அவர், கொழும்பு, கண்டி, மாத்தளை, குருநாகல், சிலாபம், பதுளை, நுவரெலியா, மொரட்டுவ, பானதுறை, ஹொரன, களுத்துறை, பலபிட்டிய, காலி, மாத்தறை, அக்மீமன மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகர்களுக்கும் விஜயம் செய்துள்ளார்.

மகாத்மா காந்தி வடமேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 1869ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி பிறந்தார்.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜாகோப், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் (சட்டம்) கணேஷ் தர்மவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிரவும்...