Main Menu

பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் நோக்கிப் பயணம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி ஊடாக கிளிநொச்சி நோக்கிச் செல்கின்றது.

வவுனியாவில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை மன்னார் நோக்கிப் பயணித்த பேரணி, நண்பகல் 12 மணியளவில் மன்னார் மடுச் சந்தியை அடைந்தது. அதன்பின்னர் அங்கிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நகர் நோக்கிச் சென்றது.

இதன்போது, பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகரைச் சென்றடைந்தது.

மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையினையும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர்.

அத்துடன், பேரணியாக வந்த மோட்டார் சைக்கள் மற்றும் வாகனங்களின் இலங்கங்களையும் பொலிஸார் பதிவுசெய்த பின்னர் மன்னார் நகரப் பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். மன்னார், பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகரப் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடி வரை குறித்த பேரணி சென்றது.

குறித்த பேரணியில், சர்வமதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதுடன் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகளும் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸிம் மக்களும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டனர். இந்நிலையில், குறித்த பேரணி மன்னார் நகரில் இருந்து மன்னார்-யாழ். பிரதான வீதியூடாக வெள்ளாங்குளம் நோக்கிச் சென்றுள்ளது.

பகிரவும்...