Main Menu

பெண்கள் புறக்கணிக்கக் கூடாத வலிகள்

பெண்கள் தலை வலி, பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே பின்னாளில் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும். அதனை தவிர்க்க பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள் குறித்து பார்ப்போம்.

பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள்இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பொறுப்புகள் கூடிக்கொண்டே இருக்கிறது. குடும்ப நலன் மீது காண்பிக்கும் அக்கறையை தங்களுடைய உடல் நலன் மீது காண்பிப்பதில்லை. தலை வலி, பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே பின்னாளில் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும். அதனை தவிர்க்க பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள் குறித்து பார்ப்போம்.

பல் வலி: பல் வலியை நிறைய பேர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். பல் மற்றும் ஈறுகளில் அடிக்கடி வலியை அனுபவித்தால் முறையாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பல் வலி என்பது இதய பிரச் சினையின் அறிகுறியாக கூட இருக்கலாம். சிலருக்கு மாரடைப்புக்கு முந்தைய அறிகுறியாக பல் வலி பிரச்சினை வெளிப்படும். பல் வலியுடன் லேசான தலைவலி அல்லது வியர்த்தல் பிரச்சினை ஏற்பட்டால் கூடுதல் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

வயிற்று வலி: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சதை பிடிப்பு, உணவு விஷத்தன்மைக்கு மாறுதல், குடல் பகுதியில் எரிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் வயிற்றுவலிக்கு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து வயிற்று வலி பிரச்சினையை எதிர்கொண்டால் அது வயிற்றுப்புண், குடல் அழற்சி, சிறுநீரக கற்கள், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். பெண்களுக்கு, வலது அல்லது இடது அடிவயிற்றில் திடீர் வலி ஏற்படுவது கருப்பை நீர்க்கட்டி நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். கரு குழாயிலேயே கரு தங்கி இருக்கும் ‘எக்டோபிக்’ கர்ப்பமாக இருந்தால் பாதிப்பு அதிகமாகிவிடக்கூடும். உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

வயிற்றின் வலது பகுதியில் திடீரென்று கடுமையான வலியை அனுபவித்தால் அது குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய வலி கொப்புளை சூழ்ந்து தொடங்கும். பெரும்பாலும் வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றின் கீழ் பகுதி யில் கத்தியை கொண்டு குத்துவது போன்று வலி ஏற்பட்டால் அது சிறுநீரக கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து வயிற்று போக்கு, தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு எடை குறைவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அது செரிமான அமைப்பில் வீக்கத்தை ஏற் படுத்தும் ‘க்ரோன்’ நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆதலால் வயிற்று வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

தலை வலி: கண்களில் ஏற்படும் அழுத்தம், மன அழுத்தம், பருவ காலநிலை மாற்றம், முறையற்ற உணவு பழக்கம், காய்ச்சல் போன்றவற்றால் தலைவலி ஏற்படலாம். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு ஒற்றைத்தலைவலி ஏற்படு வது பொதுவானது. அப்போது கண் பார்வை மங்குதல், தலைச்சுற்றல், காதுகளில் இரைச்சல், கண்கள் கூசுதல் போன்ற பாதிப்புகளை உணர்ந்தால் கவனமாக செயல்பட வேண்டும். அடிக்கடி ஒற்றைத்தலைவலியை அனுபவிக்கும் பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடது பக்க தாடை வலி: மெல்லுவதற்கு கடினமான உணவை சாப்பிடுவது, எப்போதும் ஏதாவது மென்று கொண்டே இருப்பது, சாப்பிடும்போது பற்களில் உராய்வை ஏற்படுத்துவது போன்ற காரணங்களால் தாடை வலி ஏற்படக்கூடும். பெண்களுக்கு பெரும்பாலும் தாடையின் இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றல், லேசான தலைவலி, மயக்கம், சோர்வு, முதுகுவலி போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். தொடர்ந்து தாடையில் வலி இருந்து கொண்டிருந்தால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

எலும்பு வலி: எலும்பு வலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. எலும்பு பகுதி யில் காயம், வைட்டமின் டி, கால்சியம் குறைபாடு போன்ற காரணங்களால் வலி ஏற்படக்கூடும். வைட்டமின் டி அல்லது கால்சியம் இல்லாத உணவுகளை சாப்பிடுவது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு நோய்க்கு வழிவகுக்கும். வயதான பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் நின்றவுடன், எலும்புகளை பாதுகாக்கும் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். எலும்பு பகுதியில் புற்று நோயும் ஏற்படக்கூடும்.

மார்பக வலி: கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை நிலவுவது மார்பக வலிக்கான முக்கிய காரணங்களாகும். மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதால் மார்பகங்கள் வீங்கக்கூடும். பொருத்தமற்ற பிரா அணிந்திருந்தாலோ, மார்பக பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தாலோ மார்பக வலி ஏற்படலாம். தொடர்ந்து மார்பகத்தில் வலி, கட்டி இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.

குதிகால் வலி: நாள் முழுவதும் ஹீல்ஸ் அணிவது அல்லது பொருத்தமற்ற காலணி அணிவதால் குதிகால் வலி ஏற்படக்கூடும். கால்களில் உணர்வின்மை, கால்களில் சிவத்தல், வீக்கம் இருந்தால் அது ‘ஹீல் ஸ்பர்’ என்று அழைக்கப்படும். நடக்கும்போது அசவுகரியமோ, கடுமையான வலியோ ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

யோனி வலி: யோனி பகுதியில் வறட்சி, நோய் தொற்று ஏற்பட்டு வலி உண்டாகலாம். தசை பிடிப்பு, கர்ப்பப்பை வாய் பிரச்சினை, கருப்பை புற்றுநோய், இடுப்பு அழற்சி நோய் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

நெஞ்சு வலி: மார்பு வலியை அஜீரணம் அல்லது மன அழுத்தம் என்று கருதி நிறைய பெண்கள் நிரா கரிக்கிறார்கள். கடுமையான மார்பு வலி இதயத்தில் ஏற்படும் பாதிப்பை உணர்த்தக்கூடும். குறிப்பாக கரோனரி மைக்ரோ வாஸ்குலார் நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களின் சுவர்களை பாதிக்கும். இதயத்திற்கு செல்லும் ரத்த வினியோகத்தை கட்டுப்படுத்தி பாதிப்பை அதிகப்படுத்திவிடக்கூடும். ஆண்களை விட பெண்கள்தான் இத்தகைய நோய் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறார்கள். கழுத்து, மார்பு, தாடை, தொண்டை, முதுகு பகுதிகளில் அசவுகரியத்தை உணர்தல், வியர்த்தல், தலைச்சுற்றல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளை அடிக்கடி எதிர்கொண்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

பகிரவும்...