புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சம்பந்தன் விடுக்கும் செய்தி
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படவேண்டும். அவர் அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம் நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் எனும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் மக்கள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் முன்னோடியான செய்தியை தனது தேர்தல் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர். எமது கட்சியாகிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிளவுபடாத பிரிக்க முடியாத இலங்கை நாட்டினுள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களை ஒருமித்து சஜித் பிரேமதாசவின் சின்னமான அன்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தது. அதி உச்ச அதிகாரப்பகிர்வு தேசிய பிரச்சினைக்கு தீர்வாக வழங்கப்படவேண்டும் என்ற கருத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டிருந்தனர். இதனடிப்படையிலேயே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தீர்ப்பு அமைந்திருந்தது என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் புறக்கணிப்பு, தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பு போன்ற பல்வேறு திசை திருப்பல்கள் காணப்பட்ட சூழலில் அவற்றுக்கு செவிசாய்க்காது எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாக அன்னத்திற்கு வாக்களித்து இலங்கை ஆட்சியாளர்களுக்கு பன்நாட்டு சமூகத்திற்கும் தமிழ் மக்கள் ஓர் உறுதியான செய்தியை கூறியிருக்கின்றனர். அதாவது தமது உரிமை தொடர்பான வேட்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதை மக்கள் வெளிக்காட்டியுள்ளனர். எனவே ஜனாதிபதி இந்த செய்தியை புரிந்து கொண்டு மதிப்பளித்து செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவினை பெற்று புதிய ஜனாதிபதியாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரது தெரிவை அடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் தமது நிலைப்பாட்டை விளக்கி நேற்று முன்தினம் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையிலேயே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் தமது உறுதியான நிலைப்பாட்டினை வாக்களிப்பின் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற 7ஆவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற நோக்கத்திலேயே அன்று பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேனவிற்கு பேராதரவினை வழங்கியிருந்தனர். அந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் கடும் போட்டி நிலவியது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் தமது அன்றாடப்பிரச்சினைக்கான தீர்வுகளை வழங்குவதாக பொது எதிரணி வாக்குறுதி அளித்ததையடுத்தே தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையான ஆதரவை மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியிருந்தனர்.
அதேபோன்றே தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும், இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வுடனான அரசியல் தீர்வு உருவாக்கப்படவேண்டும் என்பதை மனதில் வைத்து இம்முறையும் வடக்கு,கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவினை பெரும்பான்மையாக வழங்கியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ அரசியல் தீர்வு தொடர்பிலோ எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒருமித்த நாட்டுக்குள் அதிகூடிய அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்றும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பானது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியிருந்தது. அதனை ஏற்றுக்கொண்டே வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலாக இருக்கலாம். அல்லது இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலாக இருக்கலாம். தமிழ் மக்களின் எண்ணங்களும் நோக்கங்களும் ஒன்றாகவே இருந்துள்ளதை இதன்மூலம் அவதானிக்க முடிகின்றது. இதனைத்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இதன் மூலம் அறிக்கை மூலம் எடுத்துக்கூறியிருக்கின்றார்.
இதனைவிட இந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினத்தவர்கள் ஓரணியாகவும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பெரும்பான்மையினத்தோர் மாற்று அணியாகவும் வாக்களித்துள்ளமையினால் இனவாத ரீதியில் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழ் மக்கள் இனவாத ரீதியில் செயற்பட்டுள்ளதாகவும் பெரும்பான்மையினத் தலைவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கும் முறைக்கு இனவாத பரிமாணத்தை கற்பிப்பது நேர்மையற்ற விடயமாகும். இந்த தேர்தலில் இனவாத அடிப்படையில் வாக்களிப்பதற்கான தேவை தமிழ் மக்களுக்கு ஏற்படவில்லை. தேர்தலில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக் ஷவும் சஜித் பிரேமதாசவும் சிங்கள பௌத்தர்களேயாவர். பொருளாதார விடயங்களைப் பொறுத்தவரையிலும் கூட அவர்கள் இருவரும் ஒரேமாதிரியான அணுகுமுறையை கொண்டவர்களாகவே இருந்தனர். ஆனால் சிறுபான்மையினத்தவரின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை சஜித் பிரேமதாச தேர்தல் பிரசாரங்களில் வரவேற்கக்கூடிய நிலைப்பாடுகளை வலியுறுத்தியிருந்தார். தமிழ் மக்கள் இனவாத அடிப்படையில் வாக்களிக்க விரும்பியிருந்தால் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத தொனியுடனான கருத்துக்களை வெளியிட்ட தமிழ் வேட்பாளரான சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருக்கலாம். ஆனால் தமிழர்கள் அவ்வாறு செய்யவில்லை. சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாசவிற்கே வாக்களித்தனர். எனவே இதனை இனவாத கண்ணோட்டத்துடன் அணுகுவது தவறானது என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதே கருத்தினை அமைச்சர் இராதாகிருஷ்ணன் உட்பட தமிழ், முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உண்மையிலேயே தமிழ் பேசும் மக்கள் இனவாத கண்ணோட்டத்துடன் இந்த தேர்தலை அணுகியிருந்தால் தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்திற்கும் முஸ்லிம் மக்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வுக்கும் வாக்களித்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு இனவாத செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் பெரும்பான்மையின மக்களுடன் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதற்காகவே அவர்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்திருந்தனர். இதனை இனவாதம் பரப்பும் தரப்பினர் புரிந்துகொள்ளவேண்டும்.
யுத்தத்தால் பெரும் அழிவுகளை சந்தித்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதற்காகவே கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இந்த தேர்தலிலும் தமது வாக்குகளை ஒற்றுமையாக உறுதிப்பாட்டுடன் பயன்படுத்தியுள்ளனர்.
எனவே தமிழ் மக்களது இந்த செய்தியினை புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவரை சார்ந்தோரும் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். தற்போதைய நிலையில் சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்று கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருக்கின்றார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பிரதமராகப் போகின்றார். இவர்கள் இருவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதற்கு தீர்வுகாண முன்வரவேண்டும்.
சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற இந்த இரு தலைவர்களும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது நியாயமான அரசியல் தீர்வினை வழங்குவதற்கோ சிங்கள மக்கள் எதிர்க்கப் போவதில்லை. எனவே இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய ஜனாதிபதியும் அவரது தலைமையிலான பொதுஜன பெரமுனவினரும் முனைவது நல்லது.
(21.11.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரியத் தலையங்கம் )