Main Menu

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்- சீமான்

ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் பணிக்காக மாவட்டம் வாரியாக எனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறேன். மத்திய அரசு சிலிண்டர் விலை ரூ.200-ஐ குறைத்துள்ளது. இது மக்கள் மீதான அக்கறை இல்லை. பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதை ஏன் மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் குறைக்கவில்லை. மக்களின் மீது அக்கறை உள்ள அரசு இவ்வாறு செய்யாது. மக்களின் நலன் சார்ந்த அத்தியாவசி பொருட்களின் விலையை பாராளுமன்ற தேர்தலுக்காக குறைக்கின்றனர். மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர். நான் தமிழகத்தில் தனியாக நின்று தேர்தலை சந்திக்க தயார். ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனாதாவினர் என்னை எதிர்த்து ஒரு சதவீதம் வாக்கு அதிகமாக வாங்க முடியுமா? பா.ஜ.க.வில் 40 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளர்கள் உள்ளார்களா? அப்படி நின்றாலும் அ.தி.மு.க. நிற்க விடுமா? எங்கே சுற்றினாலும் அ.தி.மு.க. அலுவலகத்தில் தான் நிற்க வேண்டும். அவர்கள் 6 முதல் 7 சீட்டு தான் ஒதுக்குவார்கள். காலையில் குடித்துவிட்டு போனால் உற்சாகமாக வேலை செய்வார்கள் என ஒரு அமைச்சர் கூறுகிறார். சந்திராயன்-3 இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் பெயர் பலகை கூட அவர்கள் வைக்கட்டும். அங்கேயும் சென்று ராமர் கோவில் கட்டட்டும். ஒரு கிரகத்தை அழித்து விட்டனர். அடுத்து கிரகத்தை அளிக்க தயாராகி விட்டனர். சந்திராயன்-2 தோல்வி அடைகிறது. ஆனால் சந்திராயன்-3 சரியாக அனுப்பப்பட்டு தரையிறக்கம் சரியாக இறக்கப்படுகிறது என்றால் பாராளுமன்ற தேர்தல் வருவதால் தான் சரியாக இறங்கி இருக்கிறது. தமிழர்கள் முதல்வரிடம் இருந்து வாழ்த்துகளை கூட கேட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் காலில் விழுந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் தமிழ்நாட்டின் பெருமை. கலைகளின் அடையாளம். தமிழக அரசுக்கு மாணவர்கள், மீனவர்கள் மீது திடீர் அக்கறை வருகிறது. அதற்கு காரணம் பாராளுமன்ற தேர்தல் தான். வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. தனித்து தான் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...