Main Menu

பாதுகாப்பு படையினருக்கு ஜ.தே.க நன்றி தெரிவிப்பு

உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஜ.தே.கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ. தே. கட்சியின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களும், தொகுதி அமைப்பாளர்களும் பங்கேற்ற கூட்டம் நேற்று கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இடம்பெற்றது.

இது தொடர்பாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்தன தெரிவிக்கையில் எதிர்காலத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மறுசீரமைப்பது பற்றியும், சமகால நிலைமையிலிருந்து மீண்டெழுந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது பற்றியும் ஆராயப்பட்டதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அடுத்துவரும் மூன்று மாத காலப்பகுதியில் கூடுதலான வேலை வாய்ப்புக்களும், சமுர்த்தி அனுகூலங்களும் பெற்றுக் கொடுக்கப்படும். எதிர்க்கட்சியின் போலி குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலான பொறிமுறையொன்று உருவாக்கப்படும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தார்கள். நேற்றைய கூட்டத்தில் கம்பெரலிய, கிராமத்திற்கு சிரிகொத்த முதலான வேலைத்திட்டங்கள் பற்றியும் பேசப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

பகிரவும்...