Main Menu

பாதயாத்திரை வெற்றிக்காக ராகுல் காந்தி பிரார்த்தனை- கன்னியாகுமரியில் இன்று நடைபயணத்தை தொடங்குகிறார்

அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பாரத ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் இன்று தொடங்குகிறது. காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் பாத யாத்திரையாக நடந்து செல்கிறார்கள். 150 நாட்கள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரையின் போது நாடுமுழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வகையில் இந்த பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரையை தொடங்கும் முன்பு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். இதற்காக நேற்று இரவு சென்னை வந்த ராகுல் காந்தி இன்று காலை 7.15 மணி அளவில் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்தியை பார்த்து கையசைத்தனர். பதிலுக்கு ராகுல் காந்தியும் அவர்களை பார்த்து கையசைத்தபடியே நினைவிடத்துக்குள் சென்றார்.

அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நினைவிட வளாகத்துக்குள் அரச மரக்கன்று ஒன்றையும் நட்டார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் தரை விரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. காலை 7.28 மணிக்கு ராகுல்காந்தி அந்த தரைவிரிப்பில் அமர்ந்து பிரார்த்தனையை தொடங்கினார். காலை 7.44 மணி வரை 16 நிமிடங்கள் அவர் பாத யாத்திரை வெற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இதையொட்டி நினைவிட வளாகத்தில் வீணை காயத்ரியின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் சர்வமத பாடல்கள், தேசபக்தி பாடல்கள் ஆகியவை இசைக்கப்பட்டன. அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் ராகுல் காந்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இசை நிகழ்ச்சி நடத்திய வீணை காயத்ரியின் அருகில் சென்று நன்றி தெரிவித்தார். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி சென்றடைகிறார்.

இன்று பிற்பகலில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் படகு மூலம் மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் காந்தி மண்டபத்துக்கு சென்று அங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பிறகு ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்குகிறார். ராகுல் காந்திக்கு முதல் கதர் ஆடையை குமரி அனந்தன் அணிவிக்கிறார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பாத யாத்திரையின் நோக்கம் குறித்து எழுச்சி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பொதுக்கூட்டம் முடிந்ததும் கன்னியாகுமரியில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள விவேகாந்தா கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கேரவனில் ஓய்வெடுக்கிறார். நாளை (வியாழக்கிழமை) அங்கிருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார். 10-ந்தேதி வரை குமரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொச்சி, நிலாம்பூர், மைசூர், பெல்லாரி, தெய்ச்சூர், விகாராபாத், நாந்தெட், இந்தூர், கோட்டா, தவுசா, ஆழ்வார், புலுந்த்ஷகர், டெல்லி, அம்பாலா, பதன் கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகரை சென்றடைய உள்ளார். முன்னதாக இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஸ்வநாதன், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், நாசே.ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உ.பலராமன், அருள் அன்பரசு, தாமோ தரன், சுமதி அன்பரசு, முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிரவும்...