பன்னாட்டு விமானங்களை தமிழகத்தில் பறக்க அனுமதிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்து!
பன்னாட்டு விமானங்களை தமிழகத்தில் பறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், மேற்படி கோரிக்கை முன்வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்த அவர், “அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தை நடுவண் அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றது.
தமிழ்நாட்டுக்கு ஓரிரு விமானங்கள் மட்டுமே வந்தன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்றனர். உணவு, இருப்பிடம், உரிய மருத்துவ வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. அவர்கள் வடிக்கின்ற கண்ணீரை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விமானங்களின் பட்டியலிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது.
இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும். பன்னாட்டு விமானங்கள் பறக்க தமிழக அரசு அனுமதி மறுத்து வருகின்றது. எனவே தாங்கள் இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.