Main Menu

பதவி ஆசை காட்டி எங்களை தி.மு.க.வினர் இழுக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.வில் பதவிளை பெற்றுக்கொள்வதற்காக வேறு கட்சியினர் சென்றாலும் அ.தி.மு.க.வில் இருந்து யாரும் செல்லமாட்டார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில், கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சியை இன்று (புதன்கிழமை) மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைத்து பின்னர் அங்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நமது பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் கைவினைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சி வருகிற 17ஆம் திகதி வரை நடைபெறும்.

கதர் கிராம தொழில்வாரியம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகமாக நுகர்கின்ற ஒரு பழக்கம் பொதுமக்களிடையே ஏற்பட்டால் நிச்சயமாக கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்.

கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை எதிர்த்து எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. கட்சி. இதன்மூலம் தி.மு.க. ஒரு தீய சக்தி என்று உலகிற்கு அவர் அடையாளம் காட்டினார். எனவே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் ஒருபோதும் தி.மு.க.விற்கு போகமாட்டார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து யாராவது வருவார்களா? என்று கதவை திறந்து வைத்து கொண்டு, வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்க தயாராக இருக்கிறார். இது குழந்தைகளை ஏமாற்றும் கதையாகத்தான் இருக்கிறது.

தி.மு.க.வில் பதவிகளுக்காக வேறு கட்சியினர் செல்வார்களே ஒழிய அ.தி.மு.க.வில் இருந்து யாரும் போகமாட்டார்கள். அ.தி.மு.க.வை இல்லாதொழிக்கும் முயற்சியில் பதவி கொடுத்து இழுக்க பார்க்கும் மு.க.ஸ்டாலினின் ஆசை நப்பாசையாகத்தான் முடியும்” என அவர் கூறினார்.

பகிரவும்...