Main Menu

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் -பிரதமர் மஹிந்த

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் தி பினான்ஸ் நிறுவவனத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

மத்திய வங்கியின் ஆளுநர் டப்பிள்யூ.டீ.லக்ஸ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதாகும் கூறினார்.

அவ்வாறான நிதி நிறுவனங்களில் காணப்படும் முறைக்கேடுகளினால் அரசாங்கம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர், எனவே இது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இயற்றியாவது அல்லது நிதி நிறுவனங்களில் ஏற்படும் ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என கூறினார்.

மேலும், பண வைப்பாளர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவவுகள் கால தாமதம் இன்றி உரிய நேரத்தில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என மத்திய வாங்கி அதிகாரிகளுக்கு பிரதமர் கட்டளையிட்டார்.

கடந்த 22ம் திகதி தி பினான்ஸ் நிறுவனத்தின் உறுப்புரிமை மத்திய வங்கியினால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நிறுவனத்தில் வாய்ப்பு செய்திருந்த வாடிக்கையாளர்களின் 97 வீதமானவர்களுக்கு கொடுப்பனவுகள் மீள வழங்கப்படும் என மத்திய வாங்கி ஆளுநர் எச்.ஏ.கருணாரத்ன இதன்போது பிரதமருக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...