Main Menu

நாட்டில் தலை தூக்கியுள்ள புதிய பயங்கரவாதம் மேலும் பலமடைந்துள்ளது – சம்பிக்க

நாட்டில் தற்போது அச்சுறுத்தலாக காணப்படும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமே தவிர அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில் அர்த்தமில்லை என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்  தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என்பதே ஜே.வி.பி.யினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் சாராம்சம்.

இந்த தாக்குதல் சம்பவம் அரசாங்கதின் பலவீனத்தை காட்டுகின்றது உண்மையில் இந்த தவறுக்கு நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் இதற்கு தீர்வு அரசாங்கத்தை வீழ்த்துவதா அல்லது அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதா என்பதை சிந்திக்க வேண்டும்.

நாட்டில் தலைதூக்கியுள்ள புதிய பயங்கரவாதம் மேலும் பலமடைந்துள்ளது. இதனை வெற்றிகொள்ள மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு செயற்பட வேண்டும்.

இதில் தவறு என்ன என்பதை சிந்தித்து அதனை திருத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையில் தொடர்பின்மையே இதற்குக் காரணம்.

ஆனால் இன்று நாம் நாடு என்ற ரீதியில் வெற்றிகொள்ள வேண்டும். இதில் ஜே.வி.பி., தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பொதுஜன பெரமுன என அனைத்து தரப்பினரும் இணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும்” என கூறினார்.

பகிரவும்...