நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை குடும்பம்- அவுஸ்ரேலியாவில் சம்பவம்
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி உயிரிழந்தமையினால், அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ் ராஜ் உடவத்த, அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் குடியேறி இருந்தார்.
இந்நிலையில், ராஜ் உடவத்த கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ராஜ் உடவத்த, வேலை விசாவிற்கான முக்கிய நிபந்தனையை பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு உள்ளாகியமையினால், நாடு கடத்தப்பட்டு விடுவோமா என்ற அச்சத்தில், மாணவர் விசாவிலுள்ள மூத்த மகளைத் தவிர, ஏனையோர் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் ராஜ் உடவத்தவும் உயிரிழந்தார். இவ்வாறு அவர் உயிரிழந்து 1 மாதத்தின் பின்னர் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் தஞ்சக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் குறித்த தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் அல்லது ஒருமாதத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்றும் குடிவரவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ராஜ் உடவத்தவின் மனைவி, “கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் கணவனையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
ஆகவே, அவுஸ்ரேலிய அரசு, இவ்விடயத்தில் எங்களுக்கு கருணைகாட்ட வேண்டும்
மேலும், Kempsey தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.