Main Menu

நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் ஞானசார தேரர்?

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க மூன்று மாதங்கள் மட்டுமே கோரியதாகவும், இருப்பினும் 6 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பின்னர் தனது பதவியை ஞானசார தேரரிடம் ஒப்படைக்க சம்மதித்தார் என்றும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஞானசார தேரரின் கட்சி, மொத்தம் 67,758 வாக்குகளைப் பெற்று தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அதுரலிய ரத்தன தேரர், அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனவரி 5 ஆம் திகதி பதவியேற்றார்.

இந்நிலையில் அவர் பதவியேற்று எதிர்வரும் ஜூலை 5 அன்று 6 மாதங்கள் முடிவடையும் நிலையில், அவர் பதவி விலகியதும் ஞானசார தேரரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க கட்சி தயாராகி வருவதாக எங்கள் மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாம் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் போது எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்தியமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் செயற்பட்டார் என தெரிவித்து அவருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...