Main Menu

நயவஞ்சக நடவடிக்கைகளை வெளிப்படுத்தவே புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்தேன்- திலகராஜ்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா-தலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மயில்வாகனம் திலகராஜ் மேலும் கூறியுள்ளதாவது, “2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதியுடன் தொழிலாளர் தேசிய முன்னணி முடிவடைந்துள்ளது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து எம்.எஸ்.செல்லசாமி விலகிச் சென்ற சந்தர்ப்பத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தில், மயில் சின்னத்திலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சூழ்ச்சி காரணமாகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னம் இல்லாது செய்யப்பட்டது. இந்த பின்னணயிலேயே, தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சியை நாம் யாப்பு எழுதி உருவாக்கினோம்.

இவ்வாறான நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வருகைத் தந்துள்ள ஒரு கூட்டம், தொழிலாளர் தேசிய முன்னணியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே, தன்னை அந்த கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு,அந்த கட்சியை அவர்களின் தேவைக்கு ஏற்ப நடத்த முயற்சித்து வருகின்றது.

இதனாலேயே கட்சியை கலைக்கும் தீர்மானத்தை எடுத்து, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகினேன். இனிவரும் காலங்களில் அவர்கள் வேறொரு அரசியல் கட்சியை உருவாக்கி, செயற்படுவதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் ஊடாக அடைய நினைத்த அரசியல் இலக்குகளை, எதிர்வரும் காலத்தில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலின்  ஊடாக அடைய முயற்சிப்பேன்.

இதேவேளை என்னுடன் பேசி தீர்க்க வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்பட்ட போதிலும், அதை பேசி தீர்த்துக்கொள்ளாமல், நயவஞ்சகமான முறையில் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட நயவஞ்சக செயற்பாடுகளை, மக்களுக்கு வெளிப்படுத்துவேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...