Main Menu

தொடரும் வருமான வரி சோதனை- மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கம்

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின்  பிரமுகர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள் ஆகியோர் தேர்தல் பிரசாரம், வேட்பு மனு தாக்கல் போன்ற பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.  இதேப்போல் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கென தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்கட்சி தலைவர்கள் வீடுகளிலும்,  நிறுவனங்களிலும் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகள் குறித்து , தேர்தல் நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, அமலாக்கத்துறையினை தவறாக பயன்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து வருவாய் செயலாளர் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ஆகியோர், இந்த சோதனை குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. வருவாய் செயலாளர் ஏபி பாண்டே மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிசி மோடி ஆகியோர் இந்த சோதனைகளின் முழு விவரங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 281 கோடி பணம் சிக்கி இருப்பதாக வருமான வரித்துறையினர் நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...