Main Menu

தொடரும் மக்கள் போராட்டம்- ஹாங்காங் தலைவரை மாற்ற சீனா திட்டம்

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக தலைவர் கேரி லாமை மாற்றுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்ட களத்தில் வன்முறை வெடித்தது.
இது தொடர்பாக போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஹாங்காங் அரசு சிறை வைத்தது.

இதையடுத்து போராட்டங்கள் வலுப்பெற்றதால் மசோதாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஹாங்காங் தலைவர் கேரி லாம் தெரிவித்தார். ஆனாலும் மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், சீன அரசு, ஹாங்காங் தலைவர் கேரி லாமிற்கு பதிலாக இடைக்கால தலைவரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “எந்தவொரு தலைமை மாற்றங்கள் குறித்தும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், சீனாவில் சமநிலையான சூழ்நிலையை உருவாக்க சீன அரசு விரும்புகிறது, ஏனென்றால் ஹாங்காங் நகரம் வன்முறைக்கு அடிபணிவதை காண விரும்பவில்லை.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இது குறித்து முடிவு செய்தால், அடுத்த தலைவர் மார்ச் மாதத்திற்குள் நியமிக்கப்படுவார். 2022ல் முடியும் கேரி லாமின் பதவிக் காலத்தின் மீதமுள்ள பகுதியை அவர் பொறுப்பேற்று கவனித்துக்கொள்வார்.
புதிய தலைவருக்கான போட்டியில், ஹாங்காங் நாணய நிதிய முன்னாள் தலைவர் நார்மன் சான் மற்றும் ஹென்றி டாங் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். அவர்கள் பிராந்தியத்தின் நிதி செயலாளராகவும் நிர்வாகத்தின் தலைமை செயலாளராகவும் பணியாற்றியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவை முற்றிலும் கைவிட அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். 

பகிரவும்...