தெஹ்ரான் எரிபொருள் கிடங்குகள் மீது தாக்குதல் – வீதிகளில் தீப்பரவல்
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில், தெஹ்ரானுக்கு மேற்கே உள்ள அல்போர்ஸ் (Alborz) மாகாணத்தின் கராஜ் (Karaj) நகரம் உட்பட மூன்று பிரதான இடங்களில் அமைந்துள்ள எரிபொருள் விநியோக மையங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை ஈரானிய எரிசக்தி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான கிடங்குகளிலிருந்து வெளியேறிய பெருமளவிலான எரிபொருள், நகரின் நிலத்தடி கழிவுநீர்க் கால்வாய் கட்டமைப்பிற்குள் கசிந்துள்ளது. இவ்வாறு கசிந்த எரிபொருள் தீப்பற்றியதில், தெஹ்ரான் நகரின் சில வீதியோரங்களில் தீப்பிழம்புகள் ஆறாக ஓடும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஈரானிய தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், எரிபொருள் கசிவு தொடர்வதால் தீயை அணைப்பதில் சவால்கள் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிராந்திய ரீதியாக அதிகரித்து வரும் இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சூழவுள்ள இடங்களில் போக்குவரத்துத் தடைகள் விதிக்கப்பட்டு, காவல்துறையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
