Main Menu

தூக்கிலிடும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை ஜனாதிபதிக்கு மகஜர்

போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் கைதிகளை விரைவில் தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் வேண்டுகோள் விடுக்கும் மகஜரை இணையத்தினூடாக அனுப்பும் நடவடிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச்சபை முன்னெடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை , அவசர நடவடிக்கை என்ற தலைப்பில் இது தொடர்பான அறிக்கையினை தமது இணையத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் 13 மரணதண்டனைக் கைதிகள் விரைவில் தூக்கிலிடப்படும் ஆபத்திலிருக்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

43 வருடகாலத்திற்குப் பின்னர் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி திட்டமிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தூக்கிலிடப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் கைதிகளின் விபரங்கள், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதிகள் குறித்து முற்றுமுழுதான இரகசியத்தன்மையே காணப்படுகின்றது.

அந்தக் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பற்றிய வரலாறு தொடர்பிலும் எந்தவொரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் நேர்மையான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்களா, தங்கள் சார்பில் வழக்காடுவதற்கு வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்களா,

மன்னிப்புக்கோருவது தொடர்பில் அர்த்தமுள்ள செயன்முறை ஒன்றில் அவர்களால் ஈடுபடக்கூடியதாக இருந்ததா உள்ளிட்ட கேள்விகளுக்கும் முறையான பதில்கள் எவையுமில்லை.

இறுதியாக 1976 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த முன்னேற்றகரமான செயற்பாடு மறுதலையாக்கப்படும் வருடமாக 2019 இருக்கக்கூடாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிரவும்...