Main Menu

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல்  தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது.

அதாவது, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவராமல் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், சூம் தொழில்நுட்பம் ஊடாக வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இதன்போது பிரசாந்தனை எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை  பிறப்பித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த நவம்பர் 9ம் திகதி காலை கொழும்பில் இருந்து வருகை தந்த சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆரையம்பதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...