Main Menu

தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் – உதயகுமார்

தமிழ் மக்களுக்கெதிரான பேரினவாத அரச அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் என அக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு உதயகுமார் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ் மக்கள் அனைவரும் தங்களுக்கிடையிலான உள் முரண்பாடுகளைக் கைவிட்டு ஒற்றுமையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்;து நாடாளுமன்றத்தில் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டும்.

தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகள் மாயையான தோற்றப்பாடுகளை தமிழ் இளைஞர்கள் மத்தியில் தோற்றுவித்து அவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் இந்த ஏமாற்று வித்தைகளை இளைய சமுதாயத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர்களைச் சின்னாபின்னப்படுத்தும் இந்த உதிரிக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் அளிக்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் எமது பிரதிநிதித்துவத்தினை தாரை வார்ப்பதற்கான செயற்பாடாக அமையும்.

அதேநேரம் தமிழர்களுக்கு எதிராக அரசு மேற்கொள்கின்ற அடக்கு முறைகளுக்கு உறுதுணை அளிப்பதாகவும் அமையும். இதனை தமிழ் வாக்காளப் பெருமக்கள் அறிந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

எமது வேட்பாளர்களும் புத்திஜீவிகளும் பல முறை கூறியதனைப் போன்று த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளுமே பேரினவாத அரசின் ஆசீர்வாதத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடையின்றி செயற்படுத்துவதற்கான ஆணையினை பெறுவதற்காக களமிறக்கப்பட்ட கட்சிகளாகும்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற இளைஞர்கள் பொதுமக்கள் புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் ஆகியோரை மொட்டுக் கட்சி தலைவர்களின் வேண்டுதலுக்காக அவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்காக படுகொலை செய்தவர்கள் இப்போது மட்டுமென்ன தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காகவா ஒப்பந்தம் செய்திருப்பார்கள்?

மாறாக எஞ்சி இருக்கின்ற தமிழ் தேசியவாதிகளையும் எமது கட்சியான த.தே.கூட்டமைப்பினையும் இல்லாமல் செய்வதற்கும் தமிழர் தாயக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நாடு பூராகவும் மேலோங்கச் செய்வதற்காகவுமே உதிரிக் கட்சிகளின் தலைவர்களான பிள்ளையான் கருணா ஆகியோரும் மொட்டு அணியுடன் சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகம் செய்து விட்டு வெளியேறியவர்களும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளார்கள்.

எனவே எமது ஆணையினைக் கொண்டு எம்மையே அழிப்பதற்கான கபட நாடகத்தினை தற்போதைய பேரினவாத அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக மூன்றாம் நிலை கடைக்கோடி உதிரிக் கட்சிகளான தங்களின் எடுபிடிகளை அரசு பயன்படுத்தியுள்ளது’ எனக்குறிப்பிட்டார்.

பகிரவும்...