Main Menu

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமை பேரெழுச்சிப் பேரணி யாழ். மண்ணை அடைந்தது!

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணில் கால்பதித்தது.

கிளிநொச்சியில் இருந்து இன்று காலை ஆரம்பமாகிய இறுதிநாள் பேரணியில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் முகமாலையில் பெரும் வரவேற்புடன் பெருந்திரளானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி கடந்த மூன்றாம் திகதி அம்பாறை பொத்துவிலில் ஆரம்பமாகி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று நேற்று மாலை கிளிநொச்சியைச் சென்றடைந்தது.

இதையடுத்து கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி பரந்தன், பளை ஊடாக முகமாலையைக் கடந்துள்ளதுடன் கொடிகாமம், சாவகச்சேரிக்குச் சென்று யாழ்ப்பாணம் மாநகரம், யாழ்ப்பாணம் பொதுநூலகம், யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், நல்லூர் தியாகதீபம் நினைவிடம் பகுதிகளுக்கும் பேரணி செல்லவுள்ளது.

அத்துடன், கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி, வல்லைவெளி, புறாபொறுக்கி சந்தி, கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி. வல்வெட்டித்துறை தீருவில் வெளி, வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக சென்று இறுதியில் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்ந நீதிப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும், இஸ்லாமிய மக்களின் மத நம்பிக்கையான ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பல்வேறு வாழ்வுரிமைக் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெறும் மக்கள் பேரெழுச்சிப் போராட்ட வடிவங்களில் இந்தப் போராட்டம் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...