Main Menu

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைக் குழப்ப முயற்சி- மாவை விடுத்துள்ள கோரிக்கை!

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளாார்.

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.

ஏனென்றால், அரசாங்கத் தரப்பிலோ, பாதுகாப்புத் தரப்பிலோ அல்லது அரசாங்கப் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களிடத்தில் இருந்தோ இந்த ஒற்றுமையை, அரசியல் உரிமையை, ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற ஒன்றுபட்டு நிற்கின்ற இந்நிகழ்ச்சியைச் சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. மக்கள் இதனைச் செய்பவர்களுக்கு இடமளிக்கக் கூடாது.

மேலும், தற்போது இணைந்துள்ள பத்துக் கட்சிகளில் உள்ள பல தொழில் துறையைச் சார்ந்தவர்கள், போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள், தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் இந்த ஹர்த்தால் பொது வேலைநிறுத்தத்தை பூரணமாக, அர்ப்பணிப்போடு முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

அத்துடன், எவ்விதமான அசம்பாவிதமும் இல்லாது நேற்று உண்ணாவிரதத்தினை ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் இணைந்து முன்னெடுத்தோம். அது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்ததால் ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட விடயம் என்பதை மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

அரசாங்கத்தின் சார்பில் பொலிஸார், நீதிமன்றங்களுக்குச் சென்று நாட்டில் போர்க்காலங்களில் உயிர்களைப் பலிகொடுத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற உரிமையை எதிர்த்து தடைகளை விதிக்கின்றனர்.

நீதிமன்றத் தடைகளை அறிவிக்கின்ற நிலைமை ஏற்பட்டும் என்பது அனைவரும் அறிந்த விடயம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உயிர்நீத்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட, சர்வதேச சட்டங்கள் மூலமாக ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச நியமங்களின் படி உரித்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமை இந்த நாட்டில் மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மறுக்கப்பட்ட உரிமையினை நாம் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைக் காட்டும் முகமாக நாளை இடம்பெறவுள்ள பூரண கர்த்தாலிற்கு அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

பகிரவும்...