Main Menu

தமிழ் தேசியக் கட்சிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் எட்டு மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

தியாகி திலீபன் உயிர்நீத்த நாளான இன்று, யாழ்ப்பாணம், சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி மாலை ஐந்து மணிக்கு நிறைவடைந்துள்ளது.

தியாகி திலீபனின் நினைவுகூரலை நடத்துவதற்கு வடக்கு கிழக்கில் இம்முறை பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டு நீதிமன்றத் தடையும் பொலிஸாரால் பெறப்பட்டது.

இந்நிலையில் நினைகூரல்கள் நடத்துவது தமிழ் மக்களின் உரிமையாகும், அதனைத் தடுக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தன. எனினும், ஜனாதிபதி அதற்குப் பதிலளிக்காத நிலையில் நினைகூரல் தடை நீடிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தின.

போராட்டத்தின் நிறைவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா சிறப்பு உரையாற்றினார்.

இதேவேளை, போராட்டத்தினையடுத்து குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...