Main Menu

தமிழீழம் உருவாவதைத் தடுக்கவே பொது ஜன பெரமுனவுடன் இணைந்தோம் – சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்திருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றிருக்கும். அதன் மூலம் தமிழீழம் உருவாவது நிச்சயமாகும். அதனை தடுப்பதற்கே கட்சியைவிட நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயற்பட தீர்மானித்தோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்திருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக மத்திய கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு வழங்கப்போவதென்று இன்னும் உத்தியோகபூர்வமாக அந்த கட்சி அறிவிக்கவில்லை. என்றாலும் கூட்டமைப்பு 13கோரிக்கைகளை தயாரித்து அந்த கோரிக்கைகளை அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்போவதாக தெரிவித்திருக்கின்றது.

இவர்களின் கோரிக்கைகளுக்கு நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் எந்த கட்சிக்கும் இணக்கம் தெரிவிக்க முடியாது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்க இருக்கும் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கூட நாங்கள் தயாரில்லை என கோத்தாபய ராஜபக்ஷ் தெரிவித்திருக்கின்றார். ஆனால் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கின்றார். ஆனால் சஜித் பிரேமதாச  இதுதொடர்பாக எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கல்லை.

மேலும் ஒரு வேட்பாளர் ஒரு நாடு, இரண்டு வேட்பாளர் நியமித்தால் நாடு பிளவுபடும் என்றே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆரம்பம் முதல் தெரிவித்து வந்தது. அதனடிப்படையில் நாடு பிளவுபடுவதை தடுக்கும் நோக்கத்திலே கட்சியைவிட நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

பகிரவும்...