தமிழர்களின் பிரச்சினைகளை கையாள்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா கோரிக்கை
தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள்வதற்காக துறைசார் நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு இந்திய இராஜதந்திர தரப்புக்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொல்பொருள், பண்பாட்டு, கலாசார ரீதியாக ஆக்கிரமிக்கப்படும் செயற்பாடுகள் அல்லது திட்டமிட்டு மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடனான பல்வேறு தொடர்பாடர்கள் மற்றும் சந்திப்பிக்களின்போது இராஜதந்திர தரப்புக்களிடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்தே தமது தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்காக கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அப்பால் துறைசார்ந்த குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் இராஜதந்திர தரப்புக்களால் கோரப்பட்டள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தக் கோரிக்கைக்கு அமைவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் விரைவில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவானது, மக்கள் பிரச்சினைகளை முக்கியத்துவத்தின் அடிப்படையின் உரிய தரவுகளுடன் கிரமமாக ஆவணப்படுத்தப்படவுள்ளது.
இதில் மாகாண சபை முறைமையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களும் இடம்பெறவுள்ளன.
அதனைத்தொடர்ந்து இராஜதந்திர தரப்புக்களின் மூலம் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதை இலக்காகக்கொண்டு செயற்படவுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகிறது.