Main Menu

தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

தமிழக சட்டசபை கூட்டம் வரும் ஜூலை 30 தேதி வரை நடைபெறும் நிலையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது.

சட்டசபை கூட்டம் வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இன்று சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. சார்பில் எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க. கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் சார்பில் கே.ஆர்.ராமசாமி கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்று விவாதிக்கப்பட்டது.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்த வேண்டியது இருப்பதால் ஜூலை 30-ந்தேதி வரை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் தனபால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

சட்டசபை கூட்டத் தொடர் 28-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 30-ந்தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். மொத்தம் 23 நாட்களுக்கு கூட்டம் நடத்தப்படும்.

ஒவ்வொரு நாளும் கேள்வி-பதில் இடம் பெறும். 30-ந்தேதி மானிய கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கப்படும்.

ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு நாளும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படும். எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் என்ற விவரம் வருமாறு:-

28-ந்தேதி- முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல். 29, 30-ந்தேதி- விடுமுறை.

ஜூலை 1-ந்தேதி- வனம், 2-ந்தேதி- பள்ளி கல்வித் துறை, 3-ந்தேதி- கூட்டுறவு, 4-ந்தேதி-எரிசக்தி, 5-ந் தேதி-மீன் வளம், 6, 7-ந்தேதி விடுமுறை.

8-ந்தேதி- நகராட்சி நிர்வாகம், 9-ந்தேதி- நீதி நிர்வாகம், 10-ந்தேதி- சமூக வளம், 11-ந்தேதி- தொழில் துறை, 12-ந்தேதி- கைத்தறி மற்றும் செய்தி விளம்பரம், 13, 14-ந்தேதி விடுமுறை.

15-ந்தேதி -நெடுஞ்சாலைத் துறை, 16-ந்தேதி- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பத்துறை, 17-ந்தேதி- வேளாண்மைத்துறை- 18-ந் தேதி- சுற்றுலா, 19-ந்தேதி- வருவாய் துறை, 20, 21-ந்தேதி விடுமுறை.

22-ந்தேதி – காவல் துறை, 23-ந்தேதி- வணிக வரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, 24-ந்தேதி- தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை, தமிழ் வளர்ச்சி, 25-ந்தேதி- போக்குவரத்துறை, 26-ந்தேதி- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 27, 28-ந்தேதி விடுமுறை.

29-ந்தேதி- பொதுத் துறை, நிதித்துறை, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, திட்டம், ஓய்வூதியங்கள்.

30-ந்தேதி- பொதுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில்.

அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும்.

இவ்வாறு சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

பகிரவும்...