Main Menu

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாசார நிகழ்வுகளில் உள் அரங்குகளில் 200 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டிகளில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொற்று வெகுவேகமாக பரவி, நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமையே இதற்கு காரணமென கூறப்படுகிறது.

இதனையடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பகிரவும்...