Main Menu

தன்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என கூறிவந்த ஜனாதிபதி உயிரிழப்பு!

தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி, இதயக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹாசன் அறிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 27ஆம் திகதிக்கு பிறகு பொது வெளியில் காணப்படாமல் இருந்த நிலையில் டார் எஸ் சலாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

61 வயதான ஜோன் மகுஃபூலியின் மறைவிற்கு நாட்டில் 14 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்சானியா அரசமைப்புச் சட்டத்தின்படி, மீதமிருக்கும் நான்காண்டு பதவிக் காலத்துக்கும் துணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹாசன் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மகுஃபூலி மீதான வெறுப்பு மிகுந்தவர்கள் கூறிவந்தனர். எனினும் அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

ஆனால், ஜனாதிபதி, கென்யாவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவதாக தமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் டுண்டு லிஸ்ஸு கூறியிருந்தார்.

தன்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என்று கடந்த ஆண்டு ஜூன் மாதமே அறிவித்த மகுஃபூலி முகக்கவசம் என்ன பாதுகாப்பைத் தரும் என்பது குறித்து கேலி செய்தார். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் அண்டை நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் விமர்சித்தார்.

தொழுகை மூலமும், மூலிகை வேது பிடிப்பதன் மூலமும் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்கொள்ளமுடியும் என்று அவர் கூறிவந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தங்கள் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் விபரங்களை தன்சானியா வெளியிடவில்லை. அத்துடன் தடுப்பூசி வாங்கவும் தான்சானியா மறுத்துவிட்டது.

கணிதமும், வேதியியலும் படித்தவரான ஜோன் முகுஃபூலி இந்த இரண்டு பாடங்களுக்குமான ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பகிரவும்...