தனியார் வங்கியில் 33 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை
வென்னப்புவ நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் வங்கியின் வைப்பகத்தை உடைத்து அதிலிருந்த சுமார் 33 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் வங்கியின் பின்புற கதவை உடைத்துக்கொண்டு வங்கியினுள் நுழைந்துள்ளதோடு வங்கியிலிருந்த அடகு நகைகள் வைக்கப்பட்டிருந்த சேப் பினை உடைத்து அதிலிருந்த தங்க நகைகளை மாத்திரம் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொள்ளையின் பின்னர் வங்கியில் பொருத்தப்பட்டிருந்துள்ள சீசீரிவி கெமராவின் சில பகுதிகளையும் திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்கள் வங்கியில் அடகு வைத்திருந்த சுமார் 33 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருட்டுடன் தொடர்புடையவர்கள் இது வரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார் அவர்க ளைத் தேடிக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.