Main Menu

ஜெர்மனி பிரதமராக ஒலாப் ஸ்கோல்ஸ் தேர்வு

ஜெர்மனியில் ஒலாப் ஸ்கோல்ஸ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் பிரதமராக இருந்து, ஜெர்மனியை ஆட்சி செய்து வந்தார். இதன் மூலம் உலக அளவில் மிகவும் செல்வாக்குமிக்க தலைவராக அவர் அறியப்பட்டார்.

ஆனால் தொடர்ந்து 5-வது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லலை ஏஞ்சலா மெர்கல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.

இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காததால் பசுமை கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைப்பதாக சமூக ஜனநாயக கட்சி அறிவித்தது.

இந்தநிலையில் ஜெர்மனியின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்தது. இதில் சமூக ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான ஒலாப் ஸ்கோல்ஸ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டு கால ஆட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

பகிரவும்...