Main Menu

ஜனாதிபதி தேர்தல் : ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழ் இனத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை அறிந்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களை மஹிந்த ராஜபக்ஷ கொன்று குவித்தபோது, உடந்தையாகச் செயல்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுகின்றார்.

ஈழத்தமிழர் இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ஷ, பன்னாட்டு நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய நபர் ஆவார். அவரது தம்பி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவின் பேரில்தான் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று ஒழிக்கப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் வயது முதிந்தவர்களைக் கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்ஷதான், 90 ஆயிரம் தமிழ்ச் சகோதரிகள் கணவனை இழந்து தவிப்பதற்கும், இறுதிப் போரின்போது தஞ்சம் அடைந்த பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளை வதை முகாம்களில் அடைத்து வைத்து, கொடூரச் சித்திரவதை செய்து கொன்று வீசியதற்கும் காரணம்.

எனவே, வாக்குச் சாவடிக்குப் போகும் முன்பு, ஈழத்தமிழ் வாக்காளர்கள், தமிழ் இனத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு வாக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்’ என வைகோ தெரிவித்துள்ளார்.

பகிரவும்...