ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றையதினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது, சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இலங்கைக்கு சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்யப்படுமாக இருந்தால், தாம் இந்த அரசாங்கத்தில் நீடிக்கப்போவதில்லை என்று, போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாளான நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக இன்றையதினம் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளது.
அதேநேரம், கொழும்பு – முகத்துவாரம், மஹாவத்தை பகுதியில் எரிபொருள் விநியோக குழாய் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு நட்டயீடு வழங்குவது தொடர்பாகவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.