Main Menu

சொத்து விவகாரம்: தமிழ் அமைச்சர் உட்பட 8 பேருக்கு எதிராக முறைப்பாடு

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான சொத்து அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறியமைக்காக தமிழ் அமைச்சர், சஜித் பிரேமதாச உட்பட 8 பேருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் பிரிவு 4 (அ) (ii) இன் கீழ், அமைச்சர்கள் தங்கள் அறிவிப்புகளை ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி அன்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு கோரிய தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு அமைவாக, 8 அமைச்சர்கள் தங்கள் சொத்து அறிவிப்பை ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கவில்லை என்பது அறியப்பட்டது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க, நவின் திசானநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனோ கணேசன், M.H.A. ஹலீம், அகிலவிராஜ் காரியவசம், சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.

சொத்து தொடர்பான விடயங்களை அறிவிக்காதது, 1000 ரூபாய் அபராதம் மற்றும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றம் என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இவர்கள் மீது ஊழல் எதிர்ப்பு அமைப்பான இலங்கையில் உள்ள டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் அசோக ஒபயசேகரே, “தங்கள் சொத்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் அல்லாத இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி செயலகங்களை அணுகியுள்ளோம்.

அவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் அவர்களுக்கு எதிராகவும் தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என கூறினார்.

மேலும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளைத் தொடங்க அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...