Main Menu

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியினையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஜோன் செனவிரத்ன

நாட்டிலுள்ள அனைத்து மக்களும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனரென நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செனவிரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுன, தாமரை மொட்டு சின்னத்தை முன்னிறுத்தி தேர்தலுக்கான பிரசாரத்தை தற்போது முன்னெடுத்துள்ளது.

இதனால் பொதுஜன பெரமுன, தமது கட்சியின் சின்னத்தை விடுத்து, வேறு சின்னத்தில் களமிறங்க முடியாது. அதாவது நாடு முழுவதும் பொதுஜன பெரமுனவின் சின்னமாக மொட்டு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

மேலும் பிரதேச மட்டத்திலிருந்து கிராம மட்டம் வரையுள்ள 90 சதவீதமான மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியினையே எதிர்ப்பார்க்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தங்களது கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

அதிலும் பொதுஜன பெரமுனவே, கூட்டணி அமைக்கும் விடயத்தில் மும்முரமாக செயற்படுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதாவது நாட்டை அதிகளவு ஆட்சி செய்து வந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தமது பக்கம் இழுப்பதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் சுதந்திரக்கட்சி,  இரு கட்சிகளுக்கும் பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்தால் ஆதரவு வழங்குவதற்கு தயாரென கூறியுள்ளது.

இவ்வாறு சுதந்திரக்கட்சி சர்ச்சையான கருத்தை தற்போது வெளியிட்டுள்ளமையால் இக்கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்மானம் எட்டப்படும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலே பொதுஜன உறுப்பினர்கள், கட்சியின் சின்னத்தை மாற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லையென தற்போது கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...