Main Menu

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது, செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி, யாழ்.சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்தவேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெறித்து படுகொலை செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும், செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை, ஊர் மக்கள் கண்ணுற்று, மாணவியின் தாயாரிடம்  தெரியப்படுதாகவும் அதனைத் தொடர்ந்து மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59), மாணவியின் சகோதரனும் யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்தவேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களை அன்றைய தினம் நள்ளிரவே செம்மணி பகுதியிலுள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை யாழில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 600பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...