Main Menu

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் – பாடகி சின்மயி

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த போவதாக பாடகி சின்மயி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கத்தில் தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளில் இருந்து மற்றவர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களையும் வெளியே கூறினார்.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் சின்மயியும் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். போராட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ரஞ்சன் கோகாய்
இது குறித்து சின்மயி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் கமி‌ஷனர் அலுவலகத்தில் நுழைந்த உடனே அங்கு இருந்த பெண் காவலர் என்னிடம்,

‘சென்னையில் யாரும் இதுகுறித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கவில்லையே?’ என்றுதான் கேட்டார்.

அவரிடம் நான் முதலில் தொடங்கினால் என்னுடன் போராடுவதற்கு பலர் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினேன். காவல்துறையினர் என்னிடம் போராட்டம் நடத்துவதற்கு வசதியான 5 தேதிகளையும் இடங்களையும் குறிப்பிட சொன்னார்கள்.

நான் வள்ளுவர் கோட்டத்தை குறிப்பிட்டுள்ளேன். நான் மீடூ இயக்கத்தில் புகார் கூறியதில் இருந்து இன்று வரை எனக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. டப்பிங் யூனியனில் என்னை நீக்கியதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன்.

என்னைப் போல பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் துணிச்சலாக வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை கூறவேண்டும்’.இவ்வாறு அவர் கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான சின்மயியின் போராட்டத்துக்கு சில பெண்கள் அமைப்பினரும் பெண் பத்திரிகையாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பகிரவும்...