Main Menu

சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது – இலங்கைக்கான சீனத் தூதுவர்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

இலங்கை மாணவர்களின் நூறு வீதத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 5.2 பில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடைகள் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சீனத் தூதுவர் கீ சென் ஹொங், சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது என குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை சீனத் தூதுவர் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார்.

இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனவிரத்ன கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, எமது நாட்டுக்கு கல்வி மிகவும் முக்கியமானது. எமது அரசாங்கமும் அதற்கு முன்னுரிமை அளிக்கிறது. எமது நாட்டின் அபிவிருத்திக்கு கல்வி ஒரு அடிப்படை வழியாக காணப்படுகிறது.

எந்தவொரு சமூக பொருளாதார பாகுபாடின்றி தராதரம் பாராமல் அனைத்து பிள்ளைகளும் கண்ணியத்துடன் அணுக கல்வியில் முதலீடு செய்வது அவசியமாகும்.

அதற்கான பல கருத்திட்டங்களை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் கையளித்துள்ளது.

சீன அரசாங்கத்தின் இந்த ஒத்துழைப்பு அளப்பரியது. சீன அரசாங்கத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

இதன்போது இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் உரையாற்றுகையில்,

2025 கல்வியாண்டின் நன்கொடையாகவே இது காணப்படுகிறது. இலங்கை மாணவர்களின் நூறு வீதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 5.2 பில்லியன் பெறுமதியான சீருடைகள் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. எமது ஆழமான நட்பு, நீண்டகால பங்காளர்களுக்கான சான்றாக இது காணப்படுகிறது.

சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது. எமது இரு நாடுகளுக்கும் பரஸ்பர மரியாதை, புரிதல், ஒத்துழைப்பு தொடர்பாக வரலாற்றை கொண்டுள்ளன என்றார்.

பகிரவும்...
0Shares