Main Menu

சிங்கள இனவாத கோரமுகங்களே தமிழர் பாரம்பரியத்தை சிதைத்தது- பொலிஸ் அதிகாரிக்கு பதிலளித்தார் ஸ்ரீதரன்

சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் தமிழ் மக்கள் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது பாரம்பரிய பழக்கவழக்கங்களை இழந்து நிற்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர்கள் சுயத்தோடும் தங்களுக்கேயுரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்கவழக்கங்களும் கலாசாரமுமே உறுதிசெய்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பிட்டும் வடையும் சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையிலிருந்து பீட்ஸா சாப்பிடும் நிலைக்குக் கொண்டுவந்ததாக யாழ். தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ஸ்ரீதரன், “தமிழ் மக்கள் தங்களுக்குரிய நிலங்களில் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழ்ந்த மக்களாவர்.

அவர்கள் தமக்கே உரிய பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களோடு இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

எனினும், சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது உணவுப் பழக்கவழக்கங்களையே இழந்து, தமது வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்த சூழ் நிலையிலும் தமது பாரம்பரியங்களை இழக்கக்கூடாது என்பதற்காகவே அம்மாச்சி போன்ற உணவகங்களின் ஊடாக தமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரியொருவர் எமது மக்களை பிட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையிலிருந்து பீட்ஸா சாப்பிடும் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், உண்மையில் அவர்கள் எமது மக்களைச் சிதைத்து, படுகொலைசெய்து, சின்னாபின்னப்படுத்தியிருக்கிறார்களே தவிர வேறெந்த நல்ல விடயங்களையும் செய்யவில்லை.

எனவே, அவர்கள் சுயத்தோடும் இறைமையோடும் தங்களுக்கேயுரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்கவழக்கங்களும் கலாசாரமுமே நிலைநாட்டியிருக்கின்றது என்பதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...