Main Menu

சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் விசாரணையில் இருந்த போது மரணமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்சமயம் இவ்வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரித்தனர்.

இதன்போது உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ‘பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸ்’ உறுப்பினர்களை விசாரிப்போம் என சி.பி.சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை விதித்து மாநில அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

‘பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸ்’ என்பது தன்னார்வலராக பொலிஸாருடன் இணைந்து பணியாற்றுபவர்களைக் குறிக்கும். இதில் இணைந்து கொள்பவர்களுக்கு ஊதியங்கள் எதுவும் வழங்கப்படாது என்பதுடன் சீருடைகளும் இல்லை.

சேவை மனப்பான்மையுடன் இணைக்கப்பட்ட இவர்களின் சமீபத்தைய செயற்பாடுகள் மக்களுக்கு விரோதமாக உள்ளதாக முறைப்பாடுகள் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், சாத்தான்குளம் உயிரிழப்பு சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபடுத்தப்படுகின்றனர். இதனையடுத்தே தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...