Main Menu

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைவரும் ஒன்றிணையுங்கள்- மாணவர் ஒன்றியம் அழைப்பு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று (வியாழக்கிழமை) தொடர்கின்றது.

குறித்த போராட்ட இடத்தில், இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் பா.உஜாந்தன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “நீதி வேண்டிய இந்தப் போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

நாம் இந்தப் போராட்டத்தில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலியுறுத்துகின்றோம்..

அத்துடன், தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...