Main Menu

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு!

புதுவை சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுவை சட்டசபையில் வரவு செலவுக் கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) காலை ஆரம்பமானது.

கூட்டத்தொடரை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். ஆளுநர் தனது உரையை ஆரம்பித்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் இடை நடுவே கருத்து தெரிவித்தார்.

அறிவித்த எந்த திட்டத்தையும் 3 ஆண்டாக அரசு நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என முறைப்பாடு செய்தார். எனினும் ஆளுநர் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும், ஆளுநர் உரையை புறக்கணிப்பதாகவும் கூறி அன்பழகன் வெளிநடப்பு செய்தார். அவருடன் சேர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 3 ஆண்டாக ஆளுநர் உரையில் குறிப்பிட்ட எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை. எதற்கெடுத்தாலும் அரசியல் ரீதியில் மத்திய அரசின் திட்டங்களை கண் மூடித்தனமாக எதிர்த்து வருகின்றனர்.

இதனால் மாநில அரசுக்கு மத்திய அரசின் திட்ட பயன்கள் சென்றடையவில்லை. வறுமையை ஒழிப்போம், வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்டுள்ளது.

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 30 மாதமாகவும், பஞ்சாலை ஊழியர்களுக்கு 15 மாதமாகவும், ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஒன்றரை ஆண்டாகவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு 6 மாதமாகவும், பால்வாடி ஊழியர்களுக்கு 18 மாதமாகவும், பாசிக் ஊழியர்களுக்கு 3 ஆண்டாகவும் சம்பளம் வழங்கப்படவில்லை.

ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. குப்பைவரி, வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறையிலும் ஊழல் நீக்கமற நிறைந்துள்ளது.

சட்ட ஒழுங்கு அரசு கட்டுப்பாட்டில் இல்லை. எதற்கெடுத்தாலும் ஆளுநர் திட்டங்களை தடுத்து வருகிறார் என பொய்யான குற்றச்சாட்டை கூறி மக்களை காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது.

இந்த ஆட்சியின் மீதும், சபாநாயகர் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே ஆளுநரை குறைகூறி மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...