Main Menu

சஜித் நியமனம்: தலையிடிக்கு தலையணையை மாற்றுவது போன்றது – உதய கம்பன்பில

எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்குப் பதிலாக சஜித் பிரேமதாசவை கொண்டுவந்திருப்பது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போலாகும் என ஆளும் கட்சி உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறியாமல் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்குப் பதிலாக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கடும் போராட்டத்துக்கு மத்தியிலேயே அவர் பெற்றிருக்கின்றார். அதனால் அந்தப் பதவியில் அவர் நீண்டகாலம் இருக்கவேண்டும் என நான் பிராத்திக்கின்றேன்.

அதேபோல் நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்தவர் என உலக சாதனைக்கு உரிமை கோரும் ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை சஜித் பிரேமதாச முறியடிக்க வேண்டும் எனவும் பிராத்திக்கின்றேன்.

அத்துடன் ரணில் விக்ரசிங்கவுக்குப் பதிலாக சஜித் பிரதேமதாசவை கொண்டுவருவதன் மூலம் அவர்களின் வாக்குகளை அதிகரித்துக் கொள்ளலாமா? ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவே போட்டியிட இருந்தார்.

என்றாலும் சஜித் பிரேமதாச வந்தால் தேர்தலில் வெற்றிபெறலாம் என கடும் போட்டிக்கு மத்தியிலே வேட்பாளர் பதவி பெற்றுக்கொள்ளப்பட்டது.

என்றாலும் சஜித் தோல்வியடைந்தார். ரணில் விக்ரமசிங்க தேர்தல்களில் தோல்வியடைந்ததையும் பார்க்க மிகவும் மோசமான முறையிலே சஜித் பிரேமதாச தோல்வியடைந்தார். அதனால் தேர்தல் தோல்விக்கு உண்மையான காரணத்தை அறியாமல் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கொண்டுவருவதில் எந்தப் பயனும் இல்லை.

மேலும் நாட்டு மக்கள் ரணில் விக்ரமசிங்கவை நிராகரித்தது, அவர் வயதானவர் என்றோ, அவர் கோர்ட் அணிவதாலோ அல்ல. மாறாக அவரின் கொள்கை மற்றும் அவரைச் சுற்றி இருப்பவர்களாலேயே அவர் நிராகரிக்கப்பட்டார்.

இதனால் மேற்கத்தேய சாயல், சிங்கள விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் அவரைச் சுற்றி இருக்கும் சுமந்திரன், அடிப்படைவாதி ரிஷாட்,பொய் சொல்லும் சம்பிக்க, பொய்க்கே பிறந்திருக்கும் ராஜித மற்றும் மேற்கத்தேய கொள்கையில் இருக்கும் மங்கள போன்றவர்களுடன் சஜித் பிரேமதாச வந்தாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்ட தலை எழுத்தே அவருக்கும் ஏற்படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

பகிரவும்...