கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்!: அடிப்படை வாதத்தை போதிக்கும் கற்கை நிலையங்கள் இல்லாது ஒழிக்கப்படும்
தேசிய பாதுகாப்பினையும் பொருளாதாரத்தினையும் பலமான தலைமைத்துவத்தினாலேயே கட்டியெழுப்ப முடியும். தேசிய உற்பத்திகளுக்கும் தேசிய மரபுரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷநிச்சயம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
கடவத்த நகரில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
இராணுவத்தினரது பலத்தினையும் இளைஞர்களினது பலத்தினையும் ஒன்றுபடுத்தி நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும். தேசிய பொருளாதாரத்தினையும் தேசிய பாதுகாப்பினையும் முன்னேற்றும் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. கொள்கையினை அடிப்படையாகக்கொண்டே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தேன்.
அடிப்படைவாத கருத்துக்களை போதிக்கும் கற்கை நெறிகளையும், அடிப்படைவாதத்தினையும் முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும். குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தேசிய உற்பத்திகளையும் இன்று வீழ்ச்சியடையச் செய்துள்ளார்கள். இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை அரசியல்வாதிகள் இன்று வெற்றிகரமாக செய்துள்ளார்கள். நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்கள் அனைத்தும் முழுமையாக இல்லாதொழிக்கப்படும். பலமான தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற்றால் அனைத்து இன மக்களும் இலங்கையர் என்ற அடையாளத்தில் தேசிய நல்லிணக்கத்துடன் வாழ்வார்கள் என்றார்.