Main Menu

கொரோனோ பரிசோதனையை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்- மருத்துவர் காண்டீபன்

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் அவர்கள் விடுமுறையில் சென்ற மாவட்டங்கள் நான்கு என மொத்தமாக கொரோனா தொற்று மாவட்டங்கள் தற்போது 20 ஆக உயர்வடைந்துள்ளன.

அந்தவகையில், தற்போது திருகோணமலை, மாத்தளை, மொனராகலை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் இணைந்துள்ளன. இதனால் இலங்கையில் கொரோனா தொற்றில்லா பகுதி சுருங்கி வருகின்றது.

மேலும், இத்தொற்றானது சிப்பாய்களுக்கு பரவியது போன்று சுகாதார சேவையில் ஈடுபடுவர்களுக்கும் தொற்றுவதற்கு அதிக அளவிலான ஆபத்து உள்ளது.

ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள வடமாகாணத்தில் மக்கள் வைத்தியசாலைக்கு வருவது அதிகரித்துள்ளது. அத்துடன் மீண்டும் வைத்தியசாலையினை பழைய நிலையில் இயக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுற்றறிக்கையின் மூலம் கேட்டுள்ளார். ஆயினும் அவ்வாறு சேவைகளை விஸ்தரிக்க பல வைத்தியசாலைகளில் இன்னமும் முகக்கவசம், தனிநபர் பாதுகாப்பு அங்கிகளுக்கு பற்றாக்குறை உள்ளது.

நோயாளிகள் வரும்போது சரியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நோயாளிகளிடம் இருந்து சுகாதாரப் பணியாளருக்கு கொரோனா தொற்றலாம் என சுகாதார சேவைகளில் ஈடுபடுவர்களுக்கு ஒரு அச்சம் உள்ளது.

இத்தகைய நிலையில் நாங்கள் எமது பரிசோதனைகளை பல்வேறுபட்டவர்களுக்கு விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சொன்னால் பின்வரும் வகையினருக்கு இப்பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

1.நாளாந்தம் ஏற்படுகின்ற சந்தேகத்திற்குரிய தொற்றாளர்களுக்கு சோதனை செய்தல்.

2. உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களிற்கு மீண்டும் சோதனைகளை செய்தல்.

3. ஆரம்ப பரிசோதனையில் தொற்றில்லை என கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு சோதனைகளை மீண்டும் மீண்டும் பரிசோதனைகளை செய்தல்

4. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை சோதனை செய்தல்.

5. தனிமைடுத்தப்பட்ட முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு சமூகத்திற்கு இனணக்கப்பட முன்னர் சோதனைகளை மேற்கொள்ளல்

6. வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சகல தரப்பினரையும் சோதனை செய்தல்.(முதல் தொடர்புள்ளவர்கள்- யாழ்ப்பாணத்தில் 1200பேர்)

7. கொரோனா தொற்று அறிகுறிகளை காட்டுகின்ற சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் இராணுவம் உள்ளிட்ட தொற்றுக்குள்ளாக கூடிய அபாயம் உள்ளவர்க்களுக்கு சோதனை செய்தல்.

இவ்வாறு சோதனை செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் நாங்கள் ஒரு நாளைக்கு 1500 வரை பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தனியார் துறையினால் 400 பேருக்கும் அரசாங்கத்தின் பரிசோதனை நிலையங்களில் 1000 பேருக்கும் பரிசோதனை செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையினால், வடக்கு மாகாணத்திலும் இப்பரிசோதனைகளை மேற்குறிப்பிட்டவர்களுக்கு அதிகரிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் தங்கள் கவனத்தைச் செலுத்துமாறும், வைத்தியசாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்குத் தேவையான முகக்கவசம், தனிநபர் பாதுகாப்பு அங்கிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதையும் உறுதி செய்யவேண்டம்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...